ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் 2 இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து அலங்காநல்லூரில் 2 இளைஞர்கள் தீக்குள்ளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டில் வாழும் கரடி, சிங்கம், புலி ஆகியவற்றுடன் சேர்ந்து வீடுகளில் வளர்க்கும் கால்நடையான காளைகளும் காட்சிபடுத்தக் கூடாத பட்டியலில் விலங்குகள் நல ஆர்வலர்களால் சேர்க்கப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்கால தடை வாங்கிவிட்டனர்.
இத்தடை விதிக்கப்பட்ட செய்தி வெளியானது முதலே தென் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன் ஒருபகுதியாக 2 இளைஞர்கள் தீக்குளிக்கவும் முயற்சித்தனர். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியபடி ஜல்லிகட்டு மீதான தடையை நீக்க கோரியபடி தீக்குளிக்க அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களை பொதுமக்கள் தடுத்து மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நீடித்து வருகிறது.