அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம், கேரளாவில் வழக்கமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: லட்சத்தீவு அருகே தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் திங்கட்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம், கேரளாவில் வழக்கமான அளவு மழை பெய்யும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் லட்சத்தீவு அருகே தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் லட்சத்தீவு, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களில் தீவிரம் அடைந்து தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் வழக்கமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து சில நாட்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் திருவனந்தபுரத்தின் மேற்கு கடலோரப் பகுதி, கர்நாடகாவின் கடலோர பகுதி, கோவா-கொங்கன் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.