21 ஆண்டுகள் இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கு.. இறுதி தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்
21 ஆண்டுகள் இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கு.. இறுதி தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழக அரசியல் சூழலில் 21 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு இன்று இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
1991 முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக சென்னை செசன்சு கோர்ட்டில் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
சுமார் 18 ஆண்டுகளாக ஜெயலலிதா தரப்பால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
அதிர்ந்து போன அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரும், சிறையில் இருந்தவாரே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தப்பு தப்பாக கணக்கை போட்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. அதனுடன், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
எனினும், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 21 ஆண்டில் இன்று சசிகலாவை குற்றவாளி என்று தீர்ப்பெழுதப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் சூழலில் பல மாற்றங்களை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.