சென்னை ஐகோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகளாக 3 பேர் இன்று பதவி ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து புதிய நீதிபதிகள் 3 பேரும், ஐகோர்ட்டு நீதிபதியாக இன்று ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1963ம் ஆண்டு பிறந்தார். ஊரீஸ் கல்லூரியில் கணிதப்பாடத்தில் பி.எஸ்.சி பட்டப்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் 1988ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார்.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி, மாவட்ட நீதிபதி பதவிக்கு நடந்த தேர்வில் வெற்றிப் பெற்று, 2005-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி ஏற்றார். கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். பின்னர், ஐகோர்ட்டில் உள்ள விஜிலென்ஸ் பதிவாளராக பணியாற்றிய இவர், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலராக பதவி வகித்தார்.
1967ம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி என்.சதீஷ்குமார். ஊட்டியை சேர்ந்த இவர், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பையும், கோவை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1992ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றிப் பெற்று, 2005ம் ஆண்டு வேலூர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமியின் இயக்குனராக பதவி வகித்தார். கடந்த மாதம் இவர் சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
நாகர்கோவில் மாவட்டத்தில் 1963ம் ஆண்டு பிறந்தவர் நீதிபதி என்.சேஷசாயி. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை 1986ம் ஆண்டு முடித்து பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சிப் பெற்று, 2005ம் ஆண்டு முதல் செங்கல்பட்டு, திருநெல்வேலி, மதுரை, கோவை மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்தார்.