சென்னை ஹைகோர்ட் நீதிபதியை விமர்சனம் செய்த 3 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்!
சென்னை: ஹைகோர்ட் நீதிபபதியை விமர்சனம் செய்த 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பரில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். விசாரணையின்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த, ஆசிரியர் சங்கங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்து சேலத்தில் சில ஆசிரியர்கள் சார்பில் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சேலம் டவுன் போலீசார், 26 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நீதிபதியை விமர்சித்து நோட்டீஸ் அச்சடித்த காரணத்திற்காக, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுசெயலாளர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஜான் பிரேம்குமார் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் 25 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.