திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர்... நெல்லையில் தாய், 2 மகள்கள் தற்கொலை!
நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த இளைஞரால் மனமுடைந்து திருநெல்வேலி அருகே தாய் மற்றும் 2 மகள்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
திருநெல்வேலி : நெல்லை அருகே திருமணம் நிச்சயம் செய்த பின்னர் ஏமாற்றிய இளைஞரால், தாய் மற்றும் இரண்டு மகள்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லுார் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவருக்கு சீதா என்ற மனவியும் சொர்ணா, பத்மா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். பழனி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சீதா இரண்டு மகள்களுடன் வசித்துவந்தார். சொர்ணா, தபால்துறையில் வேலை கிடைத்து அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிவந்தார்.

சொர்ணாவும் உறவினரான சங்கரன்கோவில் பனையூரை சேர்ந்த வேல்சாமியும் காதலித்து வந்துள்ளனர். அண்மையில் திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இருப்பினும் வேல்சாமி, சொர்ணாவை திருமணம் செய்யாமல், சென்னைக்கு சென்றுவிட்டார். தற்போது வேல்சாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சொர்ணா விஷயத்தை தாய் மற்றும் தங்கையிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்வதறியாது திகைத்த சொர்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று இரவில் வீட்டில் வைத்து விஷம் அருந்தியதாக தெரிகிறது. காலையில் வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது 3 பேரும் உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து வாசுதேவநல்லூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களின் தற்கொலைக்கு வேல்சாமி தான் காரணம் என்று சொர்ணா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications