போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... மெரினாவை கதிகலக்கிய 4 இளைஞர்கள்!
மதுபோதையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : மெரினா கடற்கரை சாலையில் மது அருந்திவிட்டு காரை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸ் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் இடமாக மாறி வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் 4 பேர் மதுபோதையில் காரை 100 கி.மீ வேகத்தில் தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தங்கள் உறவினரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். சுமார் 100 கி.மீ வேகத்தில் காமராஜர் சாலையில் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
உழைப்பாளர் சிலை அருகே கார் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வாலாஜா சாலையின் டிவைடரின் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. கார் மோதி நின்றதையடுத்து பின் சீட்டில் இருந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார்.
ஒருவருக்கு மட்டும் காயம்
வாகனத்தை ஓட்டி வந்த 26 வயது ராஜா என்பவருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரிடமும் சோதனை நடத்தியுள்ளனர்.
மது போதையில் கார் ஓட்டியது அம்பலம்
போலீசாரின் சோதனையின் போது முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. காரில் வந்த இளைஞர்கள் 4 பேரும் சென்னை ரிச்சி கடைத்தெருவில் செல்போன் கடை வைத்திருப்பவர்கள் என்பதும் தெரிய வந்தது.
விசாரணை
இது குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிருஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் நள்ளிரவு நேரத்தில் துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.