என்ன கொடுமை சார் இது... பழைய இரும்பு கடையில்... எடைக்கு போடப்பட்ட 5,000 புதிய பள்ளி பாட புத்தகங்கள்!
மயிலாடுதுறை: பழைய இரும்பு கடையில் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை எடைபோட்டு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக ஆட்சியில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதிய புத்தகங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலை என்ற இடத்தில் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பழைய நோட்டு புத்தகங்கள் எடைக்கு வாங்கும் கடை உள்ளது. இந்த கடையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அரசு பாடப்புத்தகங்கள் கட்டுக்கட்டாக கொண்டுவந்து நேற்று இரவு சிலர் எடைக்கு போட்டு விட்டு சென்றுள்ளனர்.

2 பேர் கைது
இது குறித்து வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் அதிகாரிகள் இரும்பு கடையில் சோதனை நடத்தினர். அப்போது, 2019 - 2020- ஆம் கல்வி ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், மாவட்ட கல்வி அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் மேகநாதன் மற்றும் கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகியோரை கைது செய்தனர்.

கண்டனம்
ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்களை பழைய புத்தக கடையில் எடை போட்டு விற்பனை செய்து உள்ளது கல்வித் துறையில் நிலவும் சீர்கேடு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய இரும்பு கடையில் பாடப்புத்தகங்கள் கிடந்ததற்கு திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
|
பெருமைபட்டு கொள்ளலாம்
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், அதிமுக ஆட்சியில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது!! இந்தக் கல்வி ஆண்டுக்கான ஏறத்தாழ 50,000 பாடப்புத்தகங்கள் மயிலாடுதுறையில் உள்ள பழைய இரும்புக் கடைக்கு வந்து விட்டன.
கல்வி ஆண்டை அல்ல; கல்வியையே பூஜ்யம் ஆக்குவோம் என்று களமிறங்கிவிட்டது கல்வித்துறை.வழக்கம் போல இதற்கும் "இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது" என நமது கல்வி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்! காலக்கொடுமை! என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications