என்ன காய்ச்சல்தான் பரவுகிறது சென்னையில்?.. அரசு விளக்கக் கூடாதா??.. இதுவரை 5 பேர் பலி!
சென்னை: சென்னையில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இது டெங்கு என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் இதுவரை டெங்கு என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை. மர்மக் காய்ச்சல் என்று பொதுவாக கூறி விட்டு போய் விடுகிறார்கள் சுகாதாரத் துறையினர். இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமும், குழப்பமும், பீதியும் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல பகுதிகளில் இதுபோல மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் இது வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல்தான் பரவி வருகிறது. ஆனால் அரசு அதை மறைக்கிறது என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களுக்கோ, இது என்ன காய்ச்சல் என்று அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கூற மறுக்கிறார்களே என்று குழப்பமாக உள்ளது.

இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் சென்னையில் பலியாகியுள்ளனர். நேற்று ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு டெங்குவா அல்லது வேறு எந்தக் காய்ச்சல் என்பது குறித்து டாக்டர்கள் தரப்பில் விளக்க மறுத்து விட்டனர்.
திருவள்ளூர் அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரின் 15 வயது மகன் சீனிவாசன்தான் நேற்று மர்மக் காய்ச்சல் காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தான். இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த சிறுவனக்கு ஆரம்பத்தில் டெங்கு அறிகுறிகள் இருந்தன. இருப்பினும் தற்போது சிறுவனின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை.
மர்மக் காய்ச்சல் பரவியுள்ளதாக கூறப்படும், கருதப்படும் காவேரிராஜபுரம், சொரக்காப்பேட்டை, பள்ளிப்பட்டு, கேசவராஜகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் முகாமிட்டுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லி கூறுகையில் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. காய்ச்சல் பரவும் பகுதிகளில் இது மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு ஒரு தொலைபேசி எண் தரப்படும். அதைப் பயன்படுத்தி காய்ச்சல் பாதிப்பு குறித்து வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தரலாம் என்றார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரவும் இதுபோன்ற காய்ச்சலுக்கு பொதுவாக மர்மக் காய்ச்சல் என்று சொல்லாமல், அது என்ன காய்ச்சல், அது வந்தால் என்ன செய்ய வேண்டும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பிலும், சுகாதாரத் துறையிலும் நேரடியாகவே மக்களுக்கு விளக்கி விட்டால் அவர்கள் கவனமாக இருக்க மாட்டார்களா என்ன? இதில் ஏன் மறைக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.












Click it and Unblock the Notifications