நெல்லை அருகே அரசு பஸ்- லாரி மோதல்... 5 பேர் பலி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பஸ், லாரி மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லையில் இருந்து தென்காசிக்கு நேற்று இரவு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தில் 20 பயணிகள் இருந்தனர். ஆலங்குளம் சென்றதும் பேருந்தில் மேலும் 10 பேர் ஏறினார்கள். பேருந்து ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை கடந்தபோது எதிரே கேரளாவில் இருந்து தூத்துக்குடி சென்ற லாரி வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் லாரி நிற்காமல் தறிகெட்டு ஓடி, அருகே இருந்த ஒரு வீட்டில் இருந்த மரங்களை இடித்துத்தள்ளி நின்றது. இதில் பேருந்து டிரைவர் சீட்டின் பின்பக்க பகுதி ஒருபுறம் முழுவதும் உருக்குலைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கடையநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சூரியம்மாள்(வயது70), தென்காசியை சேர்ந்த செல்லப்பா மனைவி கோமதியம்மாள்(45), கீழப்பாவூரை சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் வெள்ளப்பாண்டியன்(45), ஆயிரப்பேரியை சேர்ந்த சிவா(23) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான கோமுவின் மகள் திருமணம் நேற்று திருச்செந்தூரில் நடந்தது. விழா முடிந்ததும் திருமண கோஷ்டியினர் வந்த வாகனத்தில் கோமு வந்ததாக தெரிகிறது. ஆலங்குளம் வந்ததும் சில பொருட்கள் வாங்குவதற்காக அவர் இறங்கிவிட்டார். அதன் பின்புதான் தென்காசி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார். சற்று நேரத்திலேயே இந்த பயங்கர விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அதே போன்று கடையநல்லூர் சூரியம்மாள் பத்தமடையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு விட்டு, நெல்லை வந்து தனக்கு பிறந்த பேரக்குழந்தையை பார்த்துவிட்டு பேருந்தில் ஊர் திரும்பினார். அவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். கீழப்பாவூரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டியன் காங்கிரஸ் மாநில பேச்சாளர் ஆவார். முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமாரின் உதவியாளராகவும் இருந்து வந்தார். அவரும் விபத்தில் பலியானார்.
விபத்தில் லாரி டிரைவர் சோமு, பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார் பட்டியை சேர்ந்த மேகநாதன், தென்காசியைச் சேர்ந்த சுப்பிரமணியன் , செல்லப்பா, மேலகரம் வேலு உள்ளிட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பாளை ஹைரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.