மயிலாடுதுறையில் 'அழகுப்போட்டி'. . "தெறி பாடலுக்கு ராம்ப் வாக்" 5 போலீசார் இடமாற்றம். .காரணம் என்ன?
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த அழகுப்போட்டியில் விஜயின் தெறி படத்தின் பின்னணி இசைக்கு ராம்ப் வாக் சென்ற போலீசார் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி தனியார் அமைப்பு சார்பில் முதன் முதலாக அழகுப்போட்டி நடந்தது.
மயிலாடுதுறையின் செம்பனார் கோவிலில் நடந்த இந்த போட்டியை நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார். எப்போதும் கவர்ச்சியான உடை அணிவதில் ஆர்வம் கொண்ட யாஷிகா ஆனந்த் இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்திருந்தார்.

நடிகை யாஷிகா ஆனந்த்
முதன் முதலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த இந்த போட்டியை சிறப்பு அழைப்பாளரான யாஷிகா ஆனந்த் முதலில் நடந்து வந்து தொடங்கி வைத்தார். குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள், திருமணமானவர்கள் என 4 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் சிறுவர்கள் கலந்துகொண்டு ஒய்யார நடைபோட்டு போஸ் கொடுத்தனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கே உரித்தான ஸ்டைலான நடைகளுடனும், வண்ண விதவிதமான ஆடைகளுடன் ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பலர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதேபோல் இளைஞர்கள் மற்றும் திருமணமான பெண்களின் ஒய்யார நடையும் பார்வையாளர்களை கவர்ந்தது.

தெறி பின்னனி இசையில் போலீசார்
நிகழ்ச்சியின்போது, அங்கு காவல் பணியில் நின்றுகொண்டிருந்த போலீசாரையும் சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மேடைக்கு வருமாறு வற்புறுத்தினர். இதையடுத்து அவர்களின் வற்புறுத்தலால் இந்த அழகுப்போட்டியில் போலீசாரும் ஒய்யாரமாக நடை போட்டனர். அப்போது அவர்களுக்கு பின்னணி இசையாக நடிகர் விஜய் நடித்த தெறி படத்தின் 'வேண்டாம் தெறிக்க தெறிக்க வேண்டாம்' என்ற பாடல் இசைக்கப்பட்டது. போலீசாரும் கம்பீரமாக ராம்ப் வாக் செய்தனர்.

பாராட்டும், விமர்சனமும்
தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு என பல அழகி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறையில் நடத்தப்பட்ட இந்த அழகுப்போட்டி பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக கிராமப்புற மக்கள் கலந்துகொள்ளும் வகையில் நடந்த இந்த போட்டி பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ராம்ப் வாக் செய்தது ஒரு சிலரின் விமர்சனத்தை பெற்றது. போலீசார் ராம்ப் வாக் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

5 போலீசார் இடமாற்றம்
இந்நிலையில், அழகுப்போட்டியில் ராம்ப் வாக் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் ரேணுகா, அஸ்வினி, நித்தியசீலா, சிவநேசன் உள்ளிட்ட 5 பேரை பணி இடமாற்றம் செய்து நாகப்பட்டின மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நிர்வாக வசதிக்காக மேற்கண்ட 5 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மேற்கண்ட 5 போலீசாரும் மயிலாடுதுறையில் உள்ள செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications