உள்ளாட்சி தேர்தலில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு - அதிர்ச்சியில் ஆண் கவுன்சிலர்கள்
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உத்தரவால் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆண்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு அடுத்தபடியாக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வரும் அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் உள்ளாட்சி பொறுப்புகளுக்கு புதியவர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தலுக்கான பணிகள் தமிழகம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 12 மாநகராட்சிகள், 154 நகராட்சிகள், 519 பேரூராட்சிகள், 32 மாவட்ட ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,648 ஊராட்சிகள் உள்ளன.
உள்ளாட்சி பதவிகளுக்கு சுழற்சி முறையில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்குவதற்காக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இது பல ஆண் கவுன்சிலர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. எங்கே தங்களது வார்டும் பறிக்கப்படு்மோ என்ற அச்சத்தில் ஆண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்த முறை 1, 3, 5 என்ற ஒற்றை இலக்கத்தில் வரும் வார்டுகள் ஆண்களுக்கும் 2, 4, 6 இரட்டை இலக்கத்தில் வரும் வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்படக் கூடும்.
அப்படி வந்தால் உள்ளாட்சி அமைப்புகளில் கோலோச்சி வந்த ஆண்கள் தங்களது வார்டுகளை பறிகொடுக்க நேரிடும். இதை சரிகட்டும் வகையில் மனைவி மற்றும் சகோதரிகளை அந்த வார்டுகளில் நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆண் கவுன்சிலர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications