சிறையில் ஜெ.: கருணாநிதி, சு.சாமி உருவ பொம்மைகளை கழுதை மேல் ஏற்றிய அதிமுகவினர்
பொள்ளாச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் 6 வதுநாளாக இன்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே ஜெயலலிதா சிறை செல்ல காரணமானவர்களின் உருவ பொம்மைகளை கழுதை மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று எரித்தனர்.
கோவை புறநகர் மாவட்ட பாசறை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து நேற்று போராட்டம் நடைபெற்றது.
கழுதை மேல் ஊர்வலம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் நடைபெற்ற அதிமுகவினர், கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி, ஆகியோரின் உருவ பொம்மைகளை கழுதை மேல் ஏற்றி வைத்து ஆனைமலை முக்கோணம் பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்தனர். இதில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்களும் பங்கேற்றனர்.
உருவப் பொம்மை எரிப்பு:
இதேபோல சென்னையில் உள்ளகரம், புழுதிவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
புரட்சி பாரதம் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள், அதிமுக சார்பு சங்கங்கள் ஆகியவையும் போராட்டத்தில் ஈடுபட்டன.