11 மாடிகள் விழுந்த இடத்தில் 72 பேர் சிக்கியிருப்பதாக ஜெ. தகவல்
சென்னை: 11 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் மொத்தம் 72 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நேற்று மாலையில் போரூரில் 11 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜெயலலிதா கூறுகையில்,
11 மாடி கட்டடம் இடிந்தது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். கட்டடத்திற்கு திட்ட அனுமதி வாங்கியதில் பிரச்சினை இல்லை. ஆனால் பில்டர்கள் விதிகளை மீறி இருக்கிறார்கள்.
என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்பதை இப்போது சொல்ல முடியாது. அருகில் உள்ள கட்டிடமும் முறையாக கட்டப்படவில்லை. இந்த விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தின் மண் தரமானதா? என்பது குறித்து ஆராய மண் ஆய்வு நடத்தப்படும். மீட்புப்பணி வேகமாக நடக்கிறது. கட்டிட இடிபாடுகளில் 72 பேர் மாட்டிக்கொண்டு உள்ளனர். 31 பேர் மீட்கப்பட்டதில், 11 பேர் இறந்திருக்கிறார்கள்.
20 பேருக்கு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு வேலைபார்த்தவர்கள் பெரும்பாலும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மீட்பு பணியில் அனைத்து துறை நிர்வாகிகளும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றார் ஜெயலலிதா.
அப்போது ஒரு செய்தியாளர், நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்களே என்று கேட்டபோது, அவருக்கு, இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பதில். இதற்கு நான் பதில் சொல்லத் தயாராக இல்லை என்று கூறினார் முதல்வர்.