பதவி ஏற்றால் மட்டும் போதுமா? 8 எம்.எல்.ஏக்களை வைத்து சடுகுடு ஆட்டம் தொடங்குகிறது
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது என்கிறது ஓபிஎஸ் கோஷ்டி
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதால் அதிமுகவின் சசிகலா கோஷ்டி மகிழ்ச்சியில் திளைக்கிறது. அதே நேரத்தில் பதவிதான் ஏற்க முடியும் என எகத்தாளமாக உள்குத்துடன் நகைக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி.
ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை... மவுனம் காக்கிறார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி இன்று வைக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளார்.
நோ பின்னடைவு
அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டிக்கு இது பின்னடைவுதானே என்றால் உள்குத்துடன் நகைக்கிறார்கள். எதற்காக இந்த நமட்டுச் சிரிப்பு என விசாரித்தால் வியூகங்களை சொல்லி அதிர வைக்கிறார்கள்.
124 எம்.எல்.ஏக்கள்
சசிகலா கோஷ்டியில் 124 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக சொல்லி பதவியேற்கிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது 117 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே போதும் என்பது யதார்த்தம்.
அசைன்மெண்ட் இதுதான்
ஆனால் சட்டசபையில் எடப்பாடிக்கு பெரும்பான்மை நிச்சயம் கிடைக்காது என அடித்துச் சொல்கிறார்கள் ஓபிஎஸ் கோஷ்டி. அதாவது ஓபிஎஸ்ஸை இயக்கும் மத்திய அரசானது தற்போது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பதவியேற்கட்டும். நீங்கள் 8 எம்.எல்.ஏக்களை மட்டும் வாக்கெடுப்பின் போது சட்டசபைக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அரசு இயல்பாகவே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறதாம்.
பினாமி ஆட்சி பனால்
அத்துடன் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வைத்து கட்சியைக் கைப்பற்றும் வேலையை துரிதப்படுத்துங்கள் எனவும் உத்தரவிட்டுள்ளதாம். சட்டசபையில் எடப்பாடிக்கே வாக்களிக்க வேண்டும் என கொறாடா உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் 8 எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கே வராமல் 'உடம்பு சரியில்லை' என கோரஸ் பாடினால் சசிகலா கோஷ்டியின் 'பினாமி' ஆட்சி கனவு தகர்ந்துதான் போகும் என்கிறார்கள்.
அந்த 8 எம்.எல்.ஏக்கள் யாரோ?