துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 துப்பாக்கிகள் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
சென்னை: துபாயில் இருந்து 8 நவீன ரக துப்பாக்கிகளை சூட்கேஸில் வைத்து கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார்.
துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு கோவையைச் சேர்ந்த ரெஜி குரியன்(40) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர் கொண்டு வந்த 2 சூட்கேஸுகளை சோதனையிட்டபோது அதில் 8 அதிநவீன துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து குரியனிடம் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் துபாயில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்ப்பதும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக கோவையில் வசிப்பதும் தெரிய வந்தது. ஒருவர் .17 எம்எம் ரக துப்பாக்கியை அதுவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று கொண்டு வரலாம். இந்நிலையில் குரியன் சட்டவிரோதமாக 8 துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளார்.
ஆனால் குரியன் 8 துப்பாக்கிகளை தீவிரவாதிகளுக்கு கொடுக்க கொண்டு வந்தாரா, அல்லது ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட கொண்டு வந்தாரா என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.