ஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்
சென்னை : சமூக சீர்கேடுகளைப் பற்றிய பாடல் வரிகளுடன் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பாடிய ராப் இசை அமெரிக்கா வரை பரவி பல லட்சம் ரசிகர்களைத் தேடித் தந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகி நிக்கி மினாஜ். இவருக்கு டுவிட்டரில் 2 கோடி ரசிகர்கள் உள்ளனர். இவரது அனகோண்டா என்ற வீடியோ ஆல்பத்தின் இசையை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த ராப் இசை பாடகியான சோபியா அஷ்ரப் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதனை பார்த்த கிராமி விருது வென்றவரான நிக்கி மினாஜ் கடந்த சனிக்கிழமை கட்டுரை ஒன்றுடன் சோபியாவின் வீடியோவை இணைத்து மீண்டும் டுவிட் செய்துள்ளார். அதில் மினாஜ் தனது பாராட்டுதலை சோபியாவுக்கு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் வெளியான 3 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.
அதன்பின் ரெடிட் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பல்லாயிரம் பேரை பலிகொண்ட போபால் வாயு கசிவு சம்பவத்தை கொண்டு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தாக்கி ராப் பாடல் ஒன்றை சோபியா அஷ்ரப் பாடியுள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடலில் சோபியா புதிய வரிகளை கொண்டு எழுதியுள்ளார்.
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றை சாடும் வகையில் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தனது பணியாளர்கள் மற்றும் மண், நீரை முறையாக சுத்தம் செய்யாத அந்த நிறுவனத்தை சாடியுள்ளதுடன் தனது பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் தவறியுள்ளதையும் எச்சரிக்கையுடன் சுட்டி காட்டியுள்ளார் சோபியா.
அந்த வீடியோவில், விஷத் தன்மை கொண்ட பாதரச ஆலை மூடப்பட்டு கடந்த 14 வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் கால்வாய் ஒன்று உள்ளது. தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் பின்தொடர அந்த கால்வாயை சுற்றி அந்த பகுதியில் அஷ்ரப் முன்னோக்கி செல்வது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜட்கா என்ற அரசு சாரா அமைப்பொன்றின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த பாடல் 3 நிமிடம் ஓடுகிறது.
சோபியா அஷ்ரப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைப்பில் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.