பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய சென்னை இளைஞர் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய சென்னை இளைஞர் அதிரடி கைது!
சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அனைத்து மாநிலங்களிலும் தங்களது ஆதரவாளர்களை உருவாக்கி வருகிறது. இதைத் தடுக்க மத்திய உளவு பிரிவினர், மாநில போலீஸாருடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜமீல் முகமது. அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் தொடர்பிருப்பதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

சென்னை நபர்
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பாலுடன் ஜமீலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் இக்பால் ஈடுபட்டதும் அம்பலமாகியது. ஜமீல் முகமதுவுக்கு இக்பால் ரூ.65 ஆயிரம் பணம் வழங்கியிருப்பதும் தெரியவந்தது.

தங்கக் கடத்தலிலும் தொடர்பு
இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார், தமிழக போலீஸாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்நிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்த ராஜஸ்தான் போலீஸார் அந்த மாநில கோர்ட்டில் கைது உத்தரவு பெற்று சென்னை புழல் சிறையில் இருந்த இக்பாலை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவேஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை இளைஞர் ஈடுபட்டது எப்படி?
வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் இக்பால், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களைப் பயன்படுத்தியபோது அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்த இயக்கத்தின் தலைவரான அபு அல் சுதானி என்பவருடன் இக்பாலுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் இக்பாலிடம் அடிக்கடி சமூகவலைதளங்கள் வழியாக தொடர்பில் இருந்துள்ளார். அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுமாறு கோரியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு இக்பால் நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இப்படி வசூலிக்கப்பட்ட பணம் ரூ.65 ஆயிரத்தைதான், ஜமீல் முகமது மூலமாக வழங்கி இருக்கிறார்.

மேலும் 4 முக்கிய பிரமுகர்கள்
சென்னையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரிடம் இருந்தும் ரூ.3 லட்சம் வரையில் இக்பால் நிதி திரட்டியுள்ளார். அந்த முக்கிய பிரமுகர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியாவை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது. சென்னை வாலிபர் இக்பால், சிரியா சென்று அங்கு ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. துருக்கி வழியாக சிரியா செல்ல இக்பால் முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் விசா கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரது சிரியா பயணம் தடைபட்டுள்ளது. அதற்குள் இக்பால் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications