ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல்!
திமுகவின் ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் செல்வகணபதி. 1991-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார். அப்போது சுடுகாட்டு மேற்கூரைகள் அமைப்பதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் அவர் கட்சி மாறி திமுகவில் எம்.பி.யும் ஆனார். அண்மையில் இந்த வழக்கில் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. இதனால் அவர் தமது எம்.பி.யை பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் தற்போது நடைபெற உள்ளது.
ஜூலை 3-ந் தேதி ராஜ்யசபா இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவில் அதிமுக வேட்பாளராக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஆஜரானவர்.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவருக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பதவியும் வழங்கப்பட்டது. அப்பொறுப்பில் இருந்த ராஜ்யசபா எம்.பி. மனோஜ்பாண்டியன் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று பகல் 12.15 மணிக்கு தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் அமைச்சர்கள் புடைசூழ தனது வேட்பு மனுவை நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அவரது மனுவில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 10 பேர் முன் மொழிந்து கையெழுத்திட்டிருந்தனர். நவநீத கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்த போது ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுலஇந்திரா உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இன்று மேலும் 2 சுயேட்சைகளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். தேர்தல் மன்னன் பத்மராஜன் 161-வது முறையாக மனுத் தாக்கல் செய்தார். பி.என்.ராமச்சந்திரன், 15-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இவர்களது மனுக்களை எம்.எல்.ஏக்கள் யாரும் முன்மொழியவில்லை. இதனால் இவர்களது வேட்புமனுக்கள் தள்ளுபடியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.