நண்பர்களின் ஆசைக்கு இணங்காததால் கல்லூரி மாணவி கொலை.. காதலன் தப்பியோட்டம் !
கும்பகோணம்: கும்பகோணம் அருகே லாட்ஜில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் காதலனே அவரை கொன்றதாக போலீசார் கருதுகின்றனர்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் மகள் கீர்த்திகா. 19 வயதான இவர் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். கீர்த்திகாவின் உறவினர் வீடு அவளிவநல்லூரில் உள்ளது. அங்கு கீர்த்திகா அடிக்கடி சென்று வந்து உள்ளார். அப்போது அவருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. பெற்றோர் காதலை துண்டித்து விடும்படி கண்டித்தனர். கீர்திகா மீது கொண்ட காதலால் அவரை எப்படியும் அடைந்து விடவேண்டும் என்று இருந்த சுபாஷ் சந்திரபோஸ் தனக்கு வேண்டிய சிலரை ஏற்பாடு செய்து, அவர்களை தனது பெற்றோர் என போலியாக கூறி கீர்த்திகா வீட்டுக்கு சென்று பெண் கேட்டு உள்ளார்.
அவர்கள் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையில் சுபாசுக்கு, கீர்த்திகாவை திருமணம் செய்து கொடுப்பது என முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்து விட்டனர்.சுபாசுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது. இந்த விவகாரம் கீர்த்திகாவுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரியாது. சுபாசுக்கு இப்படி ஒரு நிச்சயதார்த்தம் நடந்தது சுபாசின் உண்மையான பெற்றோருக்கும் தெரியாது.
இந்நிலையில் சுபாசும், கீர்த்திகாவும் அடிக்கடி வெளியே சென்று வந்தனர். கணவன், மனைவி போல நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் கீர்த்திகாவும், சுபாசும் திருநாகேஸ்வரம் கோயில் எதிரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு அந்த அறைக்கு மேலும் 2 இளைஞர்களை சுபாஷ் அழைத்து வந்துள்ளார். அவர்கள் தான் போலி பெற்றோர் ஏற்பாடு செய்தவர்கள். அதற்கு பிரதிபலனாக கீர்த்திகாவை அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு கீர்த்திகா மறுத்துள்ளார். எனவே வலுக்கட்டாயப்படுத்தி அவரை பலாத்காரம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க சுபாஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து கீர்த்திகாவை படுகொலை செய்து உள்ளனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.