நெல்லை தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ் விற்பனை?.. இளைஞர் புகாரால் பரபரப்பு!
நெல்லை: நெல்லை திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டையில் செய்யப்பட்ட பப்ஸ் விற்பனை செய்யயப்படுவதாக இளைஞர் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். பாளை திருமால் நகரில் குடியிருந்து வருகிறார்.
நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் இவர் மனைவியுடன் படம் பார்க்க சென்றுள்ளார். இடைவெளியின் போது இவர் அங்குள்ள ஸ்டாலில் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது முட்டையின் வெள்ளை ஓடு பிளாஸ்டிக் போல் இருந்துள்ளது.
அதை சுவைக்க முடியாத அளவுக்கு இழுவையாக இருந்துள்ளது. இதையடுத்து முட்டையில் பிளாஸ்டிக் இருப்பதாக கூறி கேன்டீன் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். கேன்டீன் உரிமையாளர் பாளையில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்து மொத்தமாக பப்ஸ தயாரித்து வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் வெளியே வந்து முட்டையின் வெள்ளை கருவை எரித்த போது அது மெழுகு போல எரிந்துள்ளது. இதுகுறித்து பேச்சிமுத்து நெல்லை காவல் நிலையத்தில் புகார் செய்தார். உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்க அவர்கள் அறிவுறுத்தினர்.
இந்தப் புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தியேட்டரில் பிளாஸ்டிக் பப்ஸ் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என்று அதிகாரிகள் கூறு வரும் நிலையில் நெல்லையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை பற்றி புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.