கலாம்...கலாம்... சலாம்...சலாம்.... வைரமுத்துவின் வரிகளில் அப்துல் கலாமுக்கான பாடல்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மணி மண்டபம் திறப்பு விழாவில் ஒலிப்பதற்காக கவிப்பேரரசு வைரமுத்து பாடலை எழுதியுள்ளார்.
சென்னை: இந்தியாவின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மணி மண்டபம் திறப்பு விழாவில் ஒலிப்பதற்காக வைரமுத்துவின் வைரமான வரிகளில் பாடல் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், தனது பதவிக் காலத்துக்கு பின்னர் கல்லூரி, பள்ளி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவிற்குச் சென்றபோது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பெரும் தாமதத்திற்குப் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூ.15 கோடியில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
வரும் ஜூலை 27-ஆம் தேதி கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ஒலிப்பதற்காக கலாம் குறித்து கலாம்....கலாம்... சலாம்....சலாம் என்ற பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.
தற்போது அந்த பாடல் வரிகளும், ஆடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.