முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெள்ளத்தில் இருந்து தப்பிய கிராமம்!
நெல்லை அருகே முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு கிராமம் வெள்ளத்தில் இருந்து தப்பியுள்ளது.
நெல்லை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு கிராமம் வெள்ளத்தில் இருந்து தப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள கிராமம் தாமரைகுளம். இந்த குளம் மூலம் அப்பகுதியில் சுமார் 90 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதில் விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்டவற்றை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.
தொடர் மழையினால் தாமரைக்குளத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். களக்காடு யூனியன் ஆணையாளர் சுந்தர்ராஜன் விரைந்து வந்து ஆய்வு செய்து உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
டிராக்டர் மூலம் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் குளத்திற்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டது.
இருப்பினும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பீதியில் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தினரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அப்படி கரை உடைந்தால் ஊருக்குள் வெள்ளம் புகும் என்றும், ஏராளமான விளைநிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடையும் என்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications