லலிதாக்கா சரக்கடிக்க டம்ளர் கொடுங்க.. "மப்பு" இளைஞருக்கு உருட்டுக்கட்டையால் அடி.. 2 பேர் கைது!
மது அருந்த டம்ளர் கேட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
வேலூர்: அரக்கோணம் அருகே மது அருந்த டம்ளர் கேட்ட இளைஞரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரக்கோணம் அருகே உள்ள உளியம்பாக்கம் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி தன்ராஜ் என்கிற ராஜ்குமார். 20 வயதான இவர், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவும் மது போதையில் இருந்துள்ளார். அந்த போதை போதாமல் மேலும் மது அருந்த நினைத்தார். அதனால், உளியம்பாக்கம் அருகேயுள்ள கீழாந்தூர் காலனி பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது வாங்கிக் கொண்டார்.
அதனை அருந்துவதற்காக, அருகிலுள்ள ஒரு லலிதா என்கிற ஜெயலலிதா என்பவரின் வீட்டிற்கு சென்று டம்ளர் வேண்டும் என்று கேட்டுள்ளார். கூடவே தண்ணீரும் தரும்படி கேட்டார். ஆனால் ஜெயலலிதா தர மறுத்துவிட்டார். இதனால் ஏற்கனவே போதையில் இருந்த ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதாவும் அவரது மகன் சுதாகர் என்கிற சேட்டு-வும் உருட்டைகட்டையை எடுத்து வைத்து ராஜ்குமாரை அடித்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடனடி சிகிச்சை முடிந்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார், ஜெயலலிதா மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.