குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிய போலீஸ்காரர்.. உயிரைவிட்ட இளம்பெண்! கடிதம் சிக்கியதால் பரபரப்பு
சேலம் அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி போலீஸ்காரர் ஏமாற்றியதால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் எழுதி வைத்த கடிதம் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: திருமணம் செய்துகொள்வதாக கூறி போலீஸ்காரர் ஏமாற்றியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேந்த தேன்மொழி என்பவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அவரை கோட்ட கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சீனிவாச முருகன் என்பவர் ஏமாற்றியதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தேன்மொழியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் தேன்மொழி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளது. அதில் போலீஸ்காரர் சீனிவாச முருகன் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடித்து துன்புறுத்திய போலீஸ்காரர்
தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி போலீஸ்காரர் சீனிவாச முருகன் வின்சென்ட் போலீஸ் குடியிருப்புக்கு தன்னை அழைத்து சென்றதாக தேன்மொழி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்த சீனிவாச முருகன் ஒரு மாதம் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் தன்னை தகாத வார்த்தையால் திட்டியதோடு அடித்தும் கொடுமை படுத்தியதாக கூறியுள்ளார்.
மற்றவர்களுக்கும் தெரியும்
தன்னை சீனிவாச முருகன் அடித்து துன்புறுத்தியது போலீஸ் குடியிருப்பில் வசித்த மற்றவர்களுக்கும் தெரியும் என்றும் தேன்மொழி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதாலேயே சீனிவாச முருகன் அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவ மன்னிப்பு வாங்கி விட்டேன்
தன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தன்னுடன் உல்லாசம் அனுபவித்ததற்கு பணம் கொடுத்து செட்டில் செய்வதாக சீனிவாசன் கூறியதாகவும் தேன்மொழி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு வாங்கி விட்டதாக கூறிய சீனிவாச முருகன் தன்னையும் பாவ மன்னிப்பு பெற்று விலகிச்செல்லுமாறு துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடைபிணம் போல் வாழ்கிறேன்
ஆசை வார்த்தைகளை கூறி தன்னை நம்பவைத்து தனது கற்பை சீனிவாச முருகன் சூறையாடி விட்டதாக தேன்மொழி கூறியுள்ளார். சீனிவாச முருகன் செய்த நம்பிக்கை துரோகத்தால் தனது வாழ்க்கையை இழந்து, தனது கற்பை இழந்து தனது குடும்பத்தையும் இழந்து ஒரு நடைபிணம் போல் வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறந்தாலும் தீர்வு வேண்டும்
ஒரு பெண்ணை சீரழித்து வாழ்க்கையை நாசப்படுத்திய சீனிவாச முருகன் நாட்டின் மானத்தை எப்படி காப்பாற்றுவார் என்றும் தேன்மொழி தனது கடிதத்தில் கேட்டுள்ளார். அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்பதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர் தான் இறந்தாலும் தனக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்றும் தேன்மொழி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.