ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் வரை நீட்டிப்பு
சென்னை: ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி கூறினார்.
இந்தியா முழுவதும் 2010ம் ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் ஆதார் அட்டை வழங்குவதற்காக கைரேகை, விழித்திரை, புகைப்படம் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 5 வயது முடிந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 2011ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய பணி தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடையாள புகைப்படங்கள்
2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 84.62 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 82.87 சதவீதம், ராமநாதபுரத்தில் 79.51 சதவீதம் பேருக்கும் புகைப்படம் மற்றும் கைரேகை, விழித்திரை பதிவு செய்யும் பணி முடிந்துள்ளது.
சென்னையில் உள்ள 41 லட்சத்து 53 பேரில் 22 லட்சத்து 9 ஆயிரத்து 50 பேருக்கு அதாவது 55.13 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி அருகே ஆதார் அட்டை எடுக்கும் பணிக்கான மையம் கடந்த டிசம்பர் மாதம் வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் வரை நீட்டிப்பு
தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர் இன்னும் புகைப்படம் எடுக்க வேண்டியதிருப்பதால், ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம், கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே செயல்படும். விடுபட்டவர்கள் குடும்பத்துடன் அங்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
கடைசியில் சென்னை
தமிழகம் முழுவதும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 4 கோடியே 78 லட்சம் பேர், அதாவது 70.96 சதவீதம் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதுவரை ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துக் கொண்ட 4,78,38,885 பேரில் சுமார் 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஒன்றரை மாதத்திற்குள் தபால் மூலம் அல்லது எஸ்எம்எஸ் மூலம் என்பிஆர் நம்பர் மற்றும் ஆதார் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications