இடிந்தகரை போராட்டக்காரர்களை லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க ஆம் ஆத்மி கட்சி திட்டம்
நெல்லை: கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் இடிந்தகரை போராட்டக்காரர்களை தங்கள் கட்சியில் சேர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாம்.
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களை தங்கள் கட்சியில் சேர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 15 எம்.பி. தொகுதிகளில் போட்டியிட வைக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வேளையில் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதன்படி உதயகுமார் தலைமையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை தங்கள் கட்சி உறுப்பினர்களாக ஆக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 15 தொகுதிகளில் ஊழல் செய்யாத புதுமுகங்களை களத்தில் இறக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.