‘பொட்டு’ கொலையில் மாயமான ‘அட்டாக்’... கன்னித்தீவாக நீளும் தேடுதல் வேட்டை
சென்னை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் அட்டாக் பாண்டியை இன்னமும் காவல்துறையினரால் நெருங்க முடியவில்லை என்பது மர்மமாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் மதுரையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக 'அட்டாக்' பாண்டி உள்பட 18 மீது வழக்குத் தொடரப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் அவர் போலீஸ் கையில் சிக்கவில்லை. எனவே, போலீஸ் அவருக்கு கெடு வைத்தது.
கடந்த ஜனவரி 24-ம் தேதிக்குள் போலீஸிடம் ஆஜர் ஆகவில்லை என்றால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படிச் சொல்லி ஆறு மாதங்கள் ஆன பிறகும், இன்னமும் அட்டாக் பாண்டியை போலீஸாரால் நெருங்க முடியவில்லை.
மாறுவேடத்தில் அட்டாக்
அட்டாக் பாண்டி எங்கும் ஓடி ஒளியவில்லை. மதுரை வட்டாரத்தில்தான் இருக்கிறார் என்று நெருங்கிய வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். இருக்கிறார்கள். 'ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ட்ரிம் செய்யப்பட்ட முகம், கூலிங் கிளாஸ் என அசத்தலாக மாறிவிட்டாராம்.
உறவினர்கள் வீடுகளில்
தலைமறைவாக இருப்பது போல பாவ்லா காட்டினாலும் உறவினர், நண்பர்கள், வீட்டு விசேஷங்கள், துக்க நிகழ்வுகள் என அவ்வப்போது யார் கண்ணுக்கும் சிக்காமல் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்' என்றும் சொல்கிறார்கள்.
காவல்துறையில் விசுவாசிகள்?
அட்டாக்கை நெருங்க முடியவில்லை என்று போலீஸ் சொல்வது நம்பும்படியாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மதுரை டோல்கேட் பகுதியைக் கடந்துபோன போது காருக்குள் இருந்த அட்டாக் பாண்டி, அடுத்த 10 கிலோமீட்டரில் போலீஸ் வாகன சோதனை செய்தபோது ஆள் சிக்கவே இல்லை. காரணம் காவல்துறையில் இன்னமும் அவருக்கு இருக்கும் விசுவாசிகள்தான் என்கின்றனர்.
தகவல் லீக் ஆவது எப்படி?
பாண்டியை அட்டாக் செய்ய காவல்துறையினர் போடும் திட்டங்கள் அனைத்து உடனுக்குடன் எளிதில் சென்றடைவதற்கு காரணம் அந்த விசுவாசிகள்தான் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
சவால் விடும் அட்டாக்
தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சொத்துக்களை முடக்கினாலும் தில்லாக வலம் வரும் அட்டாக் போலீசுக்கு சவால் விடுத்துள்ளாராம். தி.மு.க, அ.தி.மு.க என யார் ஆட்சியில் இருந்தாலும், இனி என்னைப் பிடிக்க முடியாது. அந்த அம்மாவால வீரப்பனை மட்டும்தான் பிடிக்க முடியும். என்னைப் பிடிக்கச் சொல்லுங்க பார்க்கலாம்' என்று கூறி வருவதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
முன்ஜாமீன் முயற்சி
'அட்டாக்' பாண்டி தொடர்ந்து தலைமறைவாக இருந்தாலும் முன்ஜாமின் கோரி, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு, கடந்த 9ம் தேதி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எம்.கருணாநிதி ஆஜரானார். விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
கன்னித்தீவுகதையாக
வடமாநிலங்களுக்கு தப்பிவிட்டார், அந்தமான் போய்விட்டார் அட்டாக் என்று ஆளுக்கு கதையாக கிளப்பிவிட்டாலும், அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவிவிட்டு அட்டாக் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை மட்டும் கன்னித்தீவு கதையாக தொடர்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
அட்டாக் சிக்குவாரா? தப்புவாரா? காவல்துறையினருக்கே வெளிச்சம்