வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை முடிவில் நடவடிக்கை.. அமைச்சர் உறுதி
வேலூர் அருகே மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூர்: அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் நேற்று மாலை ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மாணவிகளின் உடல்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியையிடம் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியைகள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றார். விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications