கமல் பேச்சில் தினகரனின் மீதான வன்மமும் வக்கிரமும் மட்டுமே தெரிகிறது: நாஞ்சில் சம்பத் தாக்கு
கமல் பேச்சில் தினகரன் மீதான வன்மமும், வக்கிரமும் மட்டுமே தெரிகிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து கமல் தெரிவித்து இருக்கும் கருத்துகளில் தினகரனின் மீதான வன்மமும், வக்கிரமும் மட்டுமே வெளிப்பட்டு உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்து உள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து நடிகர் கமல்ஹாசன் காட்டமாக விமர்சித்து இருந்தார். அதில், ஆர்.கே நகர் மக்கள் பணத்துக்கு விலை போய் விட்டார்கள். திருடனிடமே பிச்சை எடுப்பது போல இருக்கிறது இந்த இடைத்தேர்தல் முடிவுகள்? இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கருத்துகள் டி.டி.வி தினகரன் தரப்பினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தினகரனின் வெற்றி பிரம்மாண்டமானது; பிரமிக்கத்தக்கது. அதை ஜீரணிக்க முடியாமல் கமல் திணறுகிறார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் முக்கிய தங்க மகுடம் ஒன்று தரையில் கிடக்கிறது; யாரும் இல்லா நேரத்தில் அதை எடுத்து கமல் தலையில் வைத்து கொள்ள துடித்துக்கொண்டிருக்க, தினகரன் அந்த கனவில் கல்லை எறிந்து இருக்கிறார். அந்த கோபத்தில்தான் கமல் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்.
தேர்தல் சமயத்தில் எந்த கருத்துகளையும் தெரிவிக்காமல், இத்தனை நாட்களுக்கு பிறகு எதற்காக இப்படி ஒரு கருத்தை தெரிவிக்க வேண்டும். வேண்டுமென்றால் அப்போதே களத்தில் இறங்கி இருக்கலாமே ? இந்த பேச்சின் மூலம் மக்கள் மீதான அக்கறை தெரியவில்லை; தினகரன் மீதான வன்மமும், வக்கிரமும் தான் வெளிப்பட்டு உள்ளது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications