நிரம்பி வழிகிறது அடவிநயினார் அணை.. 120 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அடவிநயினார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதுடன், நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
முழுகொள்ளளவில் அணை
இதனால் குண்டாறு, கருப்பா நதி, அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் போன்ற அணைகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. 132 அடியுள்ள அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்திற்கு வரும் 120 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கார் சாகுபடிக்காக சுமார் 50 கன அடி தண்ணீரும் மேட்டு கால், கரிசல் கால் ஆகிய கால்வாய்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்திற்குட்பட்ட கடைகோடி பகுதியான சாம்பவர் வடகரை வரை கார் சாகுபடிக்கான பணியில் மும்மரமாகவும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் ஆர்வம்
அதுமட்டுமல்லாமல் அடவிநயினார் அணை நிரம்பி வழிந்தோடி வருவதால் அதனைபார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அணைக்கட்டு பகுதியை சுற்றிப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இருந்த போதிலும் வடகரை அருகே உள்ள சின்னக்காடு, பெருசா பள்ளியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், ஏராளமான தென்னை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளது. வனத்துறையினரும் யானைகளை விரட்ட எடுத்து வரும் முயற்சிகள் தோல்விகளிலே முடிகிறது. எனவே சின்னக்காடு முதல் அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் வரை சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.