இதோ வந்துட்டாங்கல்ல...இன்னைக்கு 3வது கோஷ்டியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் முதல்வருடன் சந்திப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், இன்பதுரை, தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 5 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்துள்ளனர்.
அதிமுகவினருக்கு எங்கேயாவது போய் தங்களது காரியத்தை சாதிக்க வேண்டும் என்பது கற்றத் தர வேண்டியதில்லை. ஜெயலலிதா இறந்த பின்னர் எதற்கெடுத்தாலும் அழுத பிள்ளை அம்மாவைத் தேடிப் போவதைப் போல ஆளாளுக்கு மெரினா கடற்கரையோரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அம்மா சமாதி முன்பு கண் கசக்கி நின்றார்கள்.
ஆனால் இந்த ஆட்டம் கொஞ்ச நாள் தான் அடுத்ததா சின்னம்மா சார்ஜ் எடுக்கனும் நீங்க தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்னு போயஸ்கார்டனே கதி என்று இருந்தார்கள். சின்னம்மாவும் போனப்புறம் தினகரனும் போயஸ் கார்டன் வாசல்ல ஜெயலலிதா படத்தை வைத்து சீன் போட்டு பார்த்தார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை இப்போது அவரும் ஜெயிலுக்கு போய்விட்டார்.
படையெடுக்கும் எம்எல்ஏக்கள்
அதிமுக பிளவு அணி ஓபிஎஸ் வீட்டில் கூடி பேசினர், எதிர் அணியான அதிமுக அம்மா அணி அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வீட்டில் ரகசிய ஆலோசனை என்று ஆளாளுக்கு கூட்டம் போட்டு நடத்துகின்றனர். இந்நிலையில் வீடு வீடாக போட்ட கூட்டம் முடிந்து இப்போது தலைமைச் செயலகத்தில் தமது ஆதரவு அமைச்சர் அல்லது மூத்த நிர்வாகிகளுடன் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்திக்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.
முதல் கோஷ்டி சந்திப்பு
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை தொகுதி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் தூசி மோகன் (செய்யாறு), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்) உள்பட 8 எம்எல்ஏக்கள் திடீரென தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர். தொகுதி பிரச்னை குறித்து முதல்வரிடம் பேசியதாக ரெடிமேட் பதிலை சொல்லிவிட்டு தங்களது எதிர்ப்பை சைலன்ட்டாக முதல்வரிடம் காட்டிச் சென்றது அந்த கோஷ்டி
15 எம்எல்ஏக்கள் கோரிக்கை
அடுத்த நாளே தலைமை செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை, தென்னரசு, சந்திரசேகர், உமா மகேஸ்வரி, பரமேஸ்வரி, சின்னராசு, சத்யா உள்ளிட்ட 15 எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து சென்றனர். இவர்களும் தொகுதி பிரச்னைகளை தீர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் உதவவில்லை என்று புகார் சொன்னதாகத் தெரிகிறது.
முதல்வர் அறிவுறுத்தல்
இந்நிலையில் நேற்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக நலனோடு சேர்த்து எம்எல்ஏக்களின் நலன் குறித்தும் விவாதிக்கப்பட்டதாம். எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும், அமைச்சர்கள் தங்கள் மாவட்ட எம்எல்ஏக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்ட எம்எல்ஏக்களின் பிரச்னை குறித்த கரிசனம் காட்ட வேண்டும் என்றும் முதல்வர் அன்புக் கட்டளையிட்டாராம்.
5 எம்எல்ஏக்கள் சந்திப்பு
டிடிவி தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது முதலே அவரது தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், இன்பதுரை உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்துள்ளனர். இவர்களோடு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் முதல்வரை சந்தித்து சென்றுள்ளார். தளவாய் சுந்தரம் தினகரனுக்கு பண உதவிகள் செய்ததாக ஐடி ரெய்டுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த போதே உள்ளே சென்று அடாவடியாக ஆவணங்களை தூக்கிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.