ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.6 கோடி- அப்பல்லோவிற்கு கொடுத்த அதிமுக
முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு தொகையை அதிமுக அம்மா அணி கொடுக்கிறது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவான ரூ.6 கோடியை அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக அம்மா அணி சார்பில் அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
75 நாட்களுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவ செலவு ரூ.6 கோடி. இந்த மருத்துவ செலவு தற்போது அதிமுக (அம்மா) அணி கட்சி சார்பிலேயே வழங்கப்பட உள்ளது.
முதல்வர் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவசர ஆலோசனை கூட்டத்தில் ரூ.6 கோடிக்கான காசோலை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.
வைகை செல்வன்
கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அம்மாவின் மருத்துவச் செலவு ஆறு கோடி ரூபாயை கட்சி சார்பிலே அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படியே கூட்டம் முடிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஆறு கோடி ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்து விட்டார்.
அப்பல்லோவிற்கு பணம்
டிடிவி தினகரன், தன்னால் கட்சிக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். எங்கள் கட்சி இரண்டாக பிளவுபடவில்லை. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்தான். முதல்வர் முன்னிலையில் முடிவெடுத்து கட்சி பணம் அப்போலோவுக்குக் கொடுத்தாயிற்று.
ஒற்றுமையாக இருக்கிறோம்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அவர் துணையாகவே இருக்கிறார். ஏனென்றால் அவர் நல்ல அரசியல் பண்பாளர். அவரை எம்எல்ஏக்கள் சந்தித்து வருவது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.
கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. முதல்வர் பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையில் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் வைகை செல்வன்.
6 மாதங்களுக்குப்பிறகு
ஜெயலலிதா மரணமடைந்து 6 மாதங்களுக்குப்பிறகு தற்போது அப்பல்லோ மருத்துவ சிகிக்சை செலவை செட்டில் செய்துள்ளனர். அம்மாவின் வழி நடத்தும் அரசு என்று கூறும் அதிமுகவினர், மக்கள் பிரச்சினையை இதே போல கவனிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.