அன்று ஜெ. காலில்... இன்று ஆளை மாற்றி சசிகலா காலில் விழுகின்றனர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது காலில் விழுவதை கலாச்சாரமாக மாற்றிய அதிமுகவினர் இப்போது சசிகலா காலில் விழ ஆரம்பித்துள்ளனர். அவரும் அதைத் தடுக்காமல் ரசிக்க ஆரம்பித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் சசிகலா காலில் விழுந்து வணங்கி எழுந்த செயல் அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
காலில் விழும் கலாச்சாரம் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அநியாயத்திற்கு அதிகரித்தது. குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் விழுவதற்கு அதிமுகவினர் போட்டா் போட்டி போடுவர். விதம் விதமாக விழுந்த புகைப்படங்கள் உலகப் பிரசித்தமாகின.
நெடுஞ்சான் கிடையாக விழுவது, அம்மா என்று கைகளை மேலே கூப்பிக் கொண்டு அப்படியே படுத்து விடுவது என விதம் விதமாக ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கினர் அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்தாலும், அதைப் பார்த்துக் கொண்டு தரையில் விழுந்து வணங்கிய சம்பவங்களையும் தமிழகம் பார்த்தது.
இன்று ஆளை மாற்றி விட்டனர் அதிமுகவினர். அதாவது சசிகலா காலில் விழ ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுகவினர் குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலா காலில் விழுந்து வணங்கி எழுந்து சென்றதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
சசிகலாவும் இதைத் தடுக்காமல் ரசித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளார்.
இவ்வளவு சீக்கிரம் இவர்கள் இவர்களது "அம்மா"வை தூக்கிப் போட்டு விட்டார்களே என்று மக்களும் கூட ஆச்சரியத்துடன்தான் பார்க்கின்றனர்.