ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் ஆலோசனை: திமுக புகார்
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் ஆலோசனை நடத்தியுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் ஆத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சேர்மன் அறையில் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட முக்கிய நிர்வாகிகளை கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் காமராஜ் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆத்தூர் நகராட்சி தலைவர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காமராஜ் சால்வை அணிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்பது விதி. ஆனால் அதிமுகவினர் அரசு அலுவலகங்களில் கட்சி கூட்டங்களைப் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும், சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் திமுக புகார் மனுக்களை அனுப்பியுள்ளது.