பெற்றோர்களுக்கு "ஜெ" அரசின் சாதனையை விளக்கும் துண்டுப் பிரசுரம் வழங்க அதிமுக முடிவு
சென்னை: மாணவ சமுதாயத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துள்ள பல்வேறு திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மாநிலம் முழுவதும் பெற்றோர்களிடம் விநியோகிக்க அதிமுக மாணவர் அணி திட்டமிட்டுள்ளது.
அ.தி.மு.க. மாணவர் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாணவர் அணி மாநில செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன், கோகுல இந்திரா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், செல்வராஜ், ஓட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன். மகளிர் அணி செயலாளர் சசிகலாபுஷ்பா, மாணவர் அணி துணைச் செயலாளர்கள் சோலைக் கண்ணன், பாபு ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
- நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க.வுக்கு 37 தொகுதிகளில் வெற்றியை ஈட்டித்தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாணவர் அணி நன்றி தெரிவிக்கிறது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி அதற்கு உச்ச நீதிமன்றம் மூலம் நீதியை பெற்றுத் தந்தமைக்காகவும், மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவியும் காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சையும் அளித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டமைக்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறது.
- இலங்கை தமிழர் நலன், காவிரி நதிநீர் பங்கீடு, மீனவர் பிரச்சினை, கட்டமைப்பு வசதிகளை பெருக்குதல், மின்சாரம் உள்பட தமிழக நலன்கள் தொடர்பாக முதல்வர் வழங்கிய கோரிக்கை மனுக்களை விரைந்து செயல்படுத்திட மத்திய அரசை மாணவர் அணி வற்புறுத்துகிறது.
- மாணவர்கள் நலனுக்காக 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறது.
- புரட்சித் தலைவி ஜெயலலிதா பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களையும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து நடத்திய சட்ட போராட்டங்களையும் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளையும் மாணவ- மாணவிகள் பெற்றோர்களுக்கு விளக்கும் வகையில் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது என மாணவர் அணி தீர்மானிக்கிறது.












Click it and Unblock the Notifications