பேனருக்கு தடை விதிச்சா பலூன் பறக்க விடுவோம்.. அதிமுகவின் "வாவ்" பிளான்!
உயிருடன் இருப்பவர்கள் படங்களை பேனர்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் வானில் பறக்கவிடும் ராட்சத பலூன்களில்அமைச்சர், கட்சியினரின் படங்களை அச்சிட்டு பறக்கவிடும் புது யுக்தி
சென்னை : உயிருடன் இருப்பவர்களின் படங்களை பேனர்களில் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அதிமுகவினர் பலூன்களில் படங்களை அச்சிட்டு வானில் பறக்கவிடும் புது டெக்னிக்கை கையில் எடுத்துள்ளனர்.
பிரம்மாண்ட கட்அவுட்கள், ஆடம்பர விளம்பரங்கள் என்றால் அதிமுகவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அவர் கட்சி அலுவலகம் வருகிறார் என்றாலே போயஸ்கார்டன் முதல் ராயப்பேட்டை வரை பேனர்கள் தூள்பறக்கும். தொடர்ந்து சென்னை மக்களுக்கு இடையூறான வகையிலும் சாலைகளை சேதப்படுத்தி வைக்கப்படும் பேனர்களுக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பேனர்கள் போலீசார் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் உயிருடன் இருப்பவர்களின் படங்களை பேனர்களில் பயன்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது.
இதனையடுத்து அரசியல் பிரபலங்கள் விளம்பரம் செய்ய புது யுக்தியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கான தொடக்கபுள்ளியாக கோவையில் அமைச்சர், கட்சியினர் படம் அச்சிடப்பட்ட ராட்சத பலூனை பறக்கவிட்டுள்ளனர். கோவை காந்திபுரம் முதல் அடுக்கு மேம்பாலம் திறப்பு விழா இன்று (நவ.1) நடைபெறுகிறது. இதில் முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக மேம்பாலம் மட்டுமல்லாமல், நகரம் முழுவதுமே அலங்கரிக்கப்பட்டு, திரும்பும் திசையெங்கும் பேனர்களால் நிறைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவு உள்ளதால் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளன.
முதல்வரின் படத்தைகூட அதில் அச்சிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், விழாவில் பங்கேற்கும் தலைவர்களின் படங்களை எப்படியாவது மக்கள் மத்தியில் வெளியிட வேண்டுமென விரும்பிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், மேம்பால திறப்பு விழா நடைபெறும் பகுதியில் ராட்சத பலூனைப் பறக்க விட்டுள்ளார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களோடு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளூர் அமைச்சர் வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் படங்கள் நன்கு தெரியும்படி அச்சிட்டு பறக்கவிட்டுள்ளனர்.