அவரவர் வேலையைப் பாருங்க... தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களுக்கு தினசரி சென்று வழக்கமான பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதேபோல எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்களும் தத்தமது தொகுதிகளுக்குச் சென்று மக்கள் பணியாற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம். சென்னையிலேயே அனைவரும் குழுமி இருப்பதாலும், அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொடர்ந்து வந்து செல்வதாலும் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் குவிவதால் இந்த உத்தரவாம்.
அப்பல்லோ மருத்துவமனையில் வந்து காத்திருக்க வேண்டாம் என்றும் வழக்கம் போல உங்களது பணிகளைப் பாருங்கள் என்றும் அதிமுக அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், தலைவர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
நிர்வாகப் பணிகள் ஸ்தம்பிப்பு
அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கவில்லை என்று வெளியில் கூறப்பட்டாலும் கூட உண்மையில் அரசுப் பணிகள் மிகப் பெரிய பாதிப்பை ஸ்தம்பித்துள்தாக உள்ளே இருப்பவர்கள் சொல்கிறார்கள். பல முக்கியக் கோப்புகள் கையெழுத்தாகாமல் தேங்கிக் கிடக்கின்றனவாம்.
எல்லாமே முதல்வர் என்பதால்
அதிமுக ஆட்சி என்றாலே அது ஜெயலலிதா மட்டுமே. ஜெயலலிதாவின் கண்ணசைவின்றி எதுவும் நடக்காது. இதனால்தான் தற்போது அரசு நிர்வாகம் பெரிய அளவில் ஸ்தம்பிக்க முக்கியக் காரணம் என்கிறார்கள்.
சென்னையில் குவிந்த தலைவர்கள்
கட்சியின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் சென்னையில் குவிந்துள்ளனர். முதல்வரின் உடல் நலம் குறித்து தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து வருகிறார்கள். இதனால் பல்வேறு வகைகளிலும் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
அவர்வர் வேலையைப் பாருங்கள்
இதனால் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அரரசு நிர்வாகம் முடங்கிப் போய் விட்டதாக செய்திகள் வருவதால் அதைத் தவிர்க்க அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட அனைவரும் அவரவர் வேலையை வழக்கம் போல பார்க்குமாறு உத்தரவிடப்படடுள்ளதாம்.