தாயில்லாப் பிள்ளைகளை போல அனைவரிடமும் வசை வாங்கும் அதிமுக தலைவர்கள்!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைவர்களை அனைவரும் வசைபாடி வருவது அதிகரித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைவர்களை அனைவரும் வசைபாடி வருவது அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ராணுவக் கட்டுப்பாட்டோட இருந்தது கட்சி. அமைச்சர்கள் யார் நிர்வாகிகள் யார் என்று கூட தெரியாத நிலையில் இருந்தது அதிமுக.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவினர் மிக துணிச்சலாக பேட்டிக்கொடுக்க ஆரம்பித்தனர். சசிகலாவை ஓபிஎஸ் எதிர்க்க தொடங்கிய நாள் முதல் அமைச்சர்களுக்குள்ளேயே தகாத வார்த்தைகளால் விமர்சிக்க தொடங்கினர்.
அமைச்சர்கள் என்றுகூட பார்க்காமல்
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்று சேர்ந்த பிறகு தினகரன் அணியினர் அமைச்சர்கள் என்றுகூட பார்க்காமல் சரமாரியாக விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், நாஞ்சில் சம்பத், வெற்றிவேல், புகழேந்தி ஆகியோர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர்.
வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்
எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், நாம்தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைவர்கைளை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது கொஞ்சம் அடக்கி வாசித்தவர்கள் எல்லாம் இப்போது மிக தைரியமாக குறைந்தபட்ச மரியாதையை கூட கொடுக்காமல் அமைச்சர்களை வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.
மரியாதை குறைந்துவிட்டது..
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஆளும் கட்சியினருக்கு அளிக்கப்படும் மரியாதை குறைந்திருப்பதை தொலைக்காட்சிகளில் வரும் தலைவர்களின் பேட்டிகளில் புரிந்து கொள்ளலாம். ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பைசாவுக்கு மதிக்காமல் தினகரனும் ஆட்சியாளர்களை கிண்டல் கேலி செய்து வருகின்றார்.
ஏளமாக விமர்சித்த சசிகலாபுஷ்பா
தினகரனை நேற்று சந்தித்த எம்பி சசிகலா புஷ்பாகூட அதிகார பலமிருந்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வரால் தினகரனை வீழ்த்த முடியவில்லையே என ஏளனமாக விமர்சித்தார். ஜெயலலிதா தன்னை அடித்தார் என்றும் மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை கொன்றார் என இவர் விமர்சித்தது தனிக்கதை..
தரம்தாழ்ந்த விமர்சனம்
இந்நிலையில் இதன் உச்சக்கட்டமாக பத்திரிக்கையாளர் குருமூர்த்தி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஆண்மையற்றவர்கள் என தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். அரசு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்ட பிறகும் இப்படிதான் தொடர்ந்து விமர்சிப்பேன் என்கிறார் குருமூர்த்தி.
தாயில்லாப் பிள்ளைகளை போல..
ஜெயலலிதா இருந்தபோது இவர்கள் எல்லாம் ஏன் இப்படி பேசவில்லை.. பேசுவதற்கு இடம் கிடைக்கவில்லையா.. அல்லது பேச துணிச்சல் இல்லாமல் இருந்தார்களா? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் தாயில்லாப் பிள்ளைகளை போல அதிமுக தலைவர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை..