திடீர் ஆலோசனைகள்.. அதிரடி திருப்பங்கள்.. "அப்பாடா"ன்னு கை குலுக்கி இணைந்த அதிமுக அணிகள்!
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஒரு சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று இறுதி கட்ட பரபரப்பில் தமிழக ஊடகங்கள் உள்ளன.
சென்னை : அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதல்வர் பழனிசாமி அணிகள் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலா வசம் செல்ல, வெகுண்டழுந்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்படத் தொடங்கினார். சசிகலா, தினகரனால் அதிமுகவின் மற்றொரு அணி இயக்கப்பட்ட அவர்களின் சிறைவாசத்தால் கட்சியும் ஆட்சியும் முதல்வர் பழனிசாமி கைக்கு போனது.
ஆட்சியையும், கட்சியையும் கெட்டியாகப் பிடித்த பழனிசாமி அநாயாசமாக அரசியல் காய்களை நகர்த்தினார். தற்போது கட்சியின் சின்னத்தையும், பெயரையும் பெற இணைப்பு அவசியம் என்ற சமாதானப் புறாவை பறக்கவிட்டார்.
இணைந்தன
முதலில் முரண்டு பிடித்தாலும் தற்போது வேறு வழியில்லாமல் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியுடன் இணைய பச்சைக் கொடி காட்டினர். இதனையடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகளும் இணைந்தன.
ஒருங்கிணைப்பாளர் பதவி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ்-க்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும்
மேலும் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினருக்கு இந்த பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டும் குழு
அத்துடன் அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க விரைவில் அவசர பொதுக்குழு கூட்டப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.