கெடு இன்றோடு முடிந்தது... டிடிவி தினகரன் என்ன சொல்லப்போகிறார்? எதிர்பார்ப்பில் அதிமுகவினர்
அணிகளை இணைக்க கொடுத்த கெடு இன்றோடு முடிந்ததை அடுத்து டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று அதிமுகவினர் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை இணைக்க டிடிவி தினகரன் கொடுத்த 60 நாட்கள் கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று தனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிக்க உள்ளார் டிடிவி தினகரன்.
ஜூன் 5ஆம் தேதியன்று பெங்களூருவில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமிக்கு 60 நாட்கள் கெடு விதித்தார்.
அணிகளை இணைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ரகசியமாக பேசினாலும் எதுவுமே இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.
ஓபிஎஸ் அணியினர், ஈபிஎஸ் அணியினர் மாறி மாறி கருத்துக்களை கூறி இணைப்பு பேச்சு வார்த்தைக்கு ஆப்படித்தனர். கூடவே டிடிவி தினகரன் அணியினரும் இணைப்புக்கு சிக்கல் ஏற்படும் விதமாகவே பேசி வருகின்றனர்.

60 நாட்கள் கெடு முடிந்து விட்டது
இரு அணிகளையும் இணைக்க டிடிவி தினகரன் விதித்த கெடு முடிந்து விட்டது. எனவே இன்று தனது அடுத்த கட்ட திட்டம் பற்றி அறிவிப்பேன் என்று கூறியுள்ளதால் ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் மட்டுமல்ல அதிமுக தொண்டர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட நடவடிக்கை
பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சி அலுவலகத்திற்கு தான் செல்வேன் என்று கூறினார். ஆனால் எப்போது செல்வேன் என்று கூறவில்லை. இதுவே ஈபிஎஸ் அணியினருக்கு திக் திக் சமாச்சாரம்தான்.

துணை பொதுச்செயலாளர்
3 மாதம் கட்சியை நம்பி ஒப்படைத்தேன். ஆனால் கட்சி கட்டுப்பாடாக இல்லை என்பதுதான் டிடிவி தினகரனின் கருத்து. எனவே கட்சி வலுப்படுத்த வேண்டிய கடமை துணை பொதுச்செயலாளரான தனக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறியுள்ளார் தினகரன்.

டிடிவி தினகரன் பிளான்
ஆகஸ்ட் 5 முதல் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக தினகரன் கூறினாலும், கட்சி அலுவலகத்திற்கு எப்போது வருவேன் என்று கூறவில்லை. இதற்குக் காரணம் கலவரம் தன்னால் வரவேண்டாம் என்று நினைக்கிறாராம். இப்போதைக்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் திட்டம்.

எதிர்பார்ப்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்
தனது பக்கம் 122 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். ஆனால் ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை. ஆகஸ்ட் 4ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று பெங்களூருவில் கூறினார் டிடிவி தினகரன். அது என்னவாக இருக்கும் என்பதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications