கருணாநிதி உடல்நிலை- அதிமுக எம்.பி. தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் நலம் விசாரிப்பு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வாமை நோயால் ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த 1ம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார கால சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, வியாழக்கிழமையன்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள காவேரி மருத்துவமனை, கருணாநிதிக்கு தொண்டை, நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலை சரி செய்ய ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதிக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம் என்று திமுக தலைமை அறிவித்த நிலையிலும் இன்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்து கருணாநிதியின் நலம் விசாரித்து சென்றார்.
இந்த நிலையில் அதிமுக சார்பில் இன்று காவேரி மருத்துவமனைக்கு அதிமுக எம்.பி தம்பித்துரை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வந்து கருணாநிதியின் நலம் விசாரித்தனர். இவர்களின் வருகை தமிழக அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின், பொன்முடி, மா.சுப்ரமணியன் ஆகியோர் நேரில் வந்து நலம் விசாரித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைவின்போதும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் நேரில அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications