இபிஎஸ் அணியுடன் எப்போது பேச்சுவார்த்தை...ஓ.பிஎஸ் அவசர ஆலோசனை
அதிமுக எடப்பாடி கோஷ்டியுடன் இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை : அதிமுக அம்மா அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக இபிஎஸ் அணியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார். நிதியமைச்சர் ஜெயகுமார் ஒ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களே முரண்பட்ட கருத்துகளை கூறி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றஞ்சாட்டினார்.
இரு அணிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது முக்கிய 2 கோரிக்கைகளான சசிகலா குடும்பத்தை அதிமுகவைவிட்டு வெளியேற்றுவது மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி உறுதியாக உள்ளது.
எடப்பாடி அணியுடன் சேர வேண்டாம் என்று மேட்டூர் எம்எல்ஏ செம்மலை கூறியது இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுணக்கத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்று நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் உள்ளிட்டோர் ஆலோசனையின் பங்கேற்றுள்ளனர்.