கடைசி வரைக்கும் கவனிக்கவேயில்லையே… ஏமாந்த ஆர்.கே.நகர் வாக்காளர்கள்
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாக எழுந்த புகாரை அடுத்து திருமங்கலம் பார்முலாவிற்கு அதிமுக தலைமை தடை விதித்து விட்டது. இதனால் கடைசி வரைக்கும் கவர் வரும் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த வாக்காளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு சதவிகிதம் குறைந்து போனால் என்ன செய்வது என்று கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள்.
இடைத்தேர்தல் என்றாலே பணமழைதான் என்பதை உணர்த்திய திருமங்கலம். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் தொடங்கி சமீபத்திய ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்வரை ஒரு ஓட்டுக்கு ஆயிரம் முதல் 5000 ரூபாய் வரை வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

திமுக, அதிமுக என இருவருமே மாறி மாறி ஆளுங்கட்சியாக இருக்கும்போது வரும் இடைத்தேர்தர்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பணத்தை தாராளமாக செலவு செய்வார்கள். இதனால் எங்க தேர்தலுக்கு எப்போ இடைத்தேர்தல் வரும் என்று ஏங்கத் தொடங்கினர் வாக்காளர்கள்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயல்லிதா போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, 28 அமைச்சர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவருக்கும் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் வசிக்கும் மக்களை நாள் தவறாமல், அமைச்சர்கள் அவர்களில் ஒருவராகவே மாறிப்போனார்கள்.
அதெல்லாம் சரிதான் பணத்தை இன்னும் கண்ல காட்லையே? எப்போ தருவீங்க? எப்படி தருவீங்க செக் ஆ தருவீங்களா? பணமா தருவீங்களா என இறுதிகட்ட, 'கவனிப்பு'க்காக, வாக்காளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த நேரத்தில், திடீரென்று, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கட்சித் தலைமை தடை போட்டு விட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தன்னுடைய ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களுக்கு கிடைக்காத ஓட்டை, பணம் கொடுத்து வாங்க தேவையில்லை என்று ஜெயலலிதா கூறிவிட்டாராம். எனக்கு மக்கள் மத்தியில், வரவேற்பு இருக்கிறது; அவர்கள் நிச்சயம் ஓட்டு போடுவார்கள்; மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பு. மேலும், இவ்வளவு நாளும், தொகுதி மக்களிடம் நீங்கள் செய்த பிரசாரத்துக்கு, என்ன பலன் கிடைக்கும் என்பதையும், என்னால் தெரிந்து கொள்ள என்றும் ஜெயலலிதா கூறிவிட்டதால் அமைச்சர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நல்ல கவனிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வாக்காளர்களோ ஏமாந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன












Click it and Unblock the Notifications