'நோ' கூட்டணி பேச்சுவார்த்தை- ஜேட்லி சந்திப்பை கோட்டைக்கு மாற்றிய ஜெ.... பா.ஜ.க. 'ஷாக்'
சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியுடனான சந்திப்பை திடீரென போயஸ் தோட்டத்தில் இருந்து கோட்டைக்கு முதல்வர் ஜெயலலிதா மாற்றியதே பா.ஜ.க.வின் கூட்டணி பேச்சுவார்த்தையை விரும்பாததுதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். இதனால் பா.ஜ.க. கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாம்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தே.மு.தி.க, பா.ம.க. ம.தி.மு.க. என வலுவான கூட்டணி உருவானது. ஆனால் இந்த கூட்டணி தேர்தலில் போணியாகவில்லை. பா.ஜ.க.வுக்கு 1 எம்.பி.யும் பா.ம.க.வுக்கு 1 எம்.பி.யும்தான் கிடைத்தனர்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் இந்த 3 கட்சிகளுக்கும் ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. பதவியும் எப்படியும் ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு சமிக்ஞையும் இதுவரை கிடைக்கவில்லை.
விலகிய ம.தி.மு.க.
மேலும் இலங்கை பிரச்சனையில் மோடி அரசு பதவியேற்ற போது கடும் எதிர்ப்பு தெரிவித்தது ம.தி.மு.க. மோடி ஆட்சி அமைத்த ஓரிரு மாதங்களிலேயே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தனி ஆவர்த்தனம்
இதன் பின்னர் பா.ஜ.க.வினர் எங்கள் அணியில் தே.மு.தி.க., பா.ம.க. தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறி வருகின்றனர். ஆனால் 8 மாதங்களுக்கு முன்னரே தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி; இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் என அக்கட்சி தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கிறது.
கை கோர்த்த கேப்டன்
விஜயகாந்தோ இடையில் திடீரென நாங்கள் எந்த அணியிலும் இல்லை என காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார்.
மக்கள் நலக் கூட்டணி மும்முரம்
இந்த கூட்டணியில் எப்படியும் விஜயகாந்த், வாசனை இடம்பெறச் செய்வதில் அதன் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் செல்வதைத் தடுத்தாக வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் வந்தால் வரவேறோம் என்றும் அறிவிப்பதுடன் அவரே முதல்வர் வேட்பாளர் என செய்திகளை பரப்பி வருகிறது மக்கள் நலக் கூட்டணி.
விஜயகாந்துடன் சந்திப்பு
விஜயகாந்த் நிச்சயம் மக்கள் நலக் கூட்டணிக்கு போய்விடுவாரோ என அலறிப் போன பா.ஜ.க. தலைவர்கள், திடீரென அவரை சந்தித்துப் பேசினர். ஆனால் பா.ஜ.க. தலைவர்களை 1 மணிநேரம் காத்திருக்க வைத்த கேப்டன், தங்களது அதிருப்தியை சரமாரியாக கொட்டி தீர்த்துவிட்டார்.. இத்தனை நாள் எங்களை கண்டுகொள்ளாமல் இப்போது வந்து பேசுகிறீர்கள் என்றெல்லாம் எகிறி இருக்கிறார். அத்துடன் அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்... எங்களை யாரும் சந்திப்பதே இல்லையே என விஜயகாந்த் பிடி கொடுத்து பேசாததால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்தது.
அன்புமணியுடன்...
இதேபோல் பா.ம.க. எம்.பி. அன்புமணியையும் பா.ஜ.க. தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பிலும் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது. எங்கள் தலைமையில் கூட்டணி; நான் முதல்வர் வேட்பாளர் என 8 மாதமாக பிரசாரம் செய்கிறோம்...இதை ஏற்றால்தான் கூட்டணி என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
ஜெ. கொடுத்த ஷாக்
இதனிடையே சென்னைக்கு வருகை தந்த அருண்ஜேட்லியை ஞாயிறன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த், அன்புமணியுடன் தொடர்ச்சியாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது பா.ஜ.க.; அதே நேரத்தில் போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் நம்மோடும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என நினைத்த ஜெயலலிதா திடீரென கோட்டைக்கு ஜேட்லி சந்திப்பை மாற்றிவைத்தார்.
கோட்டையில் வெள்ள சேதம் குறித்து மட்டுமே பேச முடியும்; அரசியல் பேச முடியாது என்பது ஜெயலலிதாவின் திட்டம். இதற்காகவே நேற்று திடீரென ஜேட்லி சந்திப்பை கோட்டைக்கு மாற்றிவிட்டார் ஜெயலலிதா. அவர் நினைத்தது போல நிர்வாக ரீதியான சந்திப்பாக மட்டுமே அது அமைந்தது.
கதவை சாத்தியது அதிமுக
ஏற்கனவே தே.மு.தி.க, பா.ம.க. கூட்டணிக்கு கை விரித்துவிட்ட நிலையில் அ.தி.மு.க.வும் கதவை சாத்தும் வகையில் நடந்து கொண்டதால் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது பா.ஜ.க. இருப்பினும் மனம் தளராமல் ஜாதி கட்சிகளை சேர்ப்பதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறதாம் பா.ஜ.க.