ஊரே பற்றி எரிந்தாலும் மண் சோறு சாப்பிடுவதை நிறுத்தாத கோகுல இந்திரா, வளர்மதி, சி.ஆர். சரஸ்வதி
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு பிடாரி இளங்காளியம்மன் கோயிலில், அதிமுக மகளிர் அணி சார்பில், மண்சோறு சாப்பிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பா.வளர்மதி, சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் மண்சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து, காவிரி நதிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு நிறுத்தி வைப்பு என ஊரே பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் அதிமுகவினர் ஒருபக்கம் மண்சோறு, நேர்த்திக்கடன் என கோவில் கோவிலாக சென்று வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், அவரின் ஆயுள் அதிகரிக்கவும் வேண்டி அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.
மண்சோறு சாப்பிட்ட மகளிர் அணி
வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் வேளாங்கன்னி (எ) கஸ்தூரி எம்.சி., தலைமையில் சைதாப்பேட்டை ஸ்ரீ பிடாரி இளங்காளியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிடும் வேண்டுதலில் முன்னாள் அமைச்சரும் இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, கழக செய்தி தொடர்பு உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் அஞ்சுலட்சுமி எம்.சி., வச்சலா எம்.சி., பார்த்திமாபாபு, பொம்மி எம்.சி., பத்மினி சுந்தரம் எம்.சி., சரஸ்வதி ரங்கசாமி, வள்ளி, ஜோஸ்பின் முருகவேல், கவுசல்யா, ஜெயதேவி, வசந்தி, கலா, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சைதை இளங்காளியம்மன்
சைதாபேட்டையில் உள்ள இளங்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். ஆண்டு தோறும் அக்னி சட்டி எடுத்து வழிபடுவார் வளர்மதி. இந்த நிலையில் ஜெயலலிதா நலம்பெற மண்சோறு சாப்பிட்டுள்ளார். நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதி, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
கற்பகவிநாயகருக்கு வழிபாடு
சிவகங்கை மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியினர், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்தனர். ஜெ ஜெயலலிதா பேரவை மற்றும் நகர கழகம் சார்பில், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் மற்றும் திருப்பத்தூர் யோகபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டது.
சிறப்பு ஹோமங்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஓசூரில் உள்ள வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில், மஹா கணபதி ஹோமம், தனவந்திரி ஹோமம், மஹாமிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் பகுதிக் கழகம் சார்பில் ஆதம்பாக்கம் ஆவுடைநாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோயிலில் மிருத்யஞ்சய ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
சிறப்பு வழிபாடுகள்
திருவள்ளூர் மேற்குமாவட்ட அம்மா பேரவை சார்பில், பூந்தமல்லி வீரஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் திருக்கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், தண்டுமாரியம்மன் கோவில் மற்றும் உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.
சிறப்பு அபிஷேகம்
மதுரையில், ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் திருவாதவூர் திருமரைநாதர் கோயிலில் விநாயகர், சுப்பிரமணியர், வேதபுரீஸ்வர், வேதநாயகி அம்பிகைக்கு நவசக்தி அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. 108 வேதமந்திரங்கள் முழுங்க யாகசாலை பூஜை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.