மாமியார் வீட்டு வாசலில் தர்ணா இருந்த பெண் வக்கீலை சரமாரியாகத் தாக்கிய கணவர் கைது!
தூத்துக்குடி: காதலித்தி திருமணம் செய்த கணவர் ஏமாற்றியதாக தர்ணா இருந்த பெண் வழக்கறிஞரைத் தாக்கிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி டிவிகேஎஸ் நகரை சேர்நதவர் பெண் வக்கீல் பர்ஜனா பேகம். இவரும் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணத்தை சேர்ந்த சத்தியகுமாரும் 2009ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இதன் பிறகு பர்ஜனா பேகத்துடன் தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்த சத்தியகுமார், பின்னர் வெளிநாட்டில் வேலை பார்க்க போவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
இதனிடையே வேறு பெண்ணை மணம் முடித்த சத்தியகுமார் அவருடனேயே குடும்பம் நடத்த துவங்கியுள்ளார். இதுகுறித்து தெரிய வரவே பர்ஜனா பேகம் அதிர்ச்சி அடைந்து கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி திருச்சி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்த போதும் பர்ஜனா பேகத்தை தங்களது குடும்பத்தில் ஏற்க சத்தியகுமாரும், அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இதையடுத்து திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டிணத்தில் உள்ள கணவர் வீட்டு முன்பு கடந்த சில நாட்களாக பர்ஜனா பேகம் போராட்டம் நடத்தி வந்தார். அப்போது மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு உள்ளேயே இருந்தனர். போலீசார் சமாதானப்படுத்தியும் அதை ஏற்க மறுத்த பர்ஜனா பேகம் தொடர்நது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் வீட்டின் பின்புறம் வழியாக மாமனாரும், மாமியாரும் வெளியேறினர். ஆனாலும் அவர் அசைத்து கொடுக்காமல் தொடர்ந்த போராட்டம் நடத்தி வந்தார். இதனால் திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சத்தியகுமார் ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்த அவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய பர்ஜனா பேகத்தை சராமரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை திருச்செந்தூர் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த பர்ஜனா பேகத்தின் புகாரின் பேரில் எஸ்ஐ சிவசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சத்தியகுமாரை தேடி வந்தார்.
இந்நிலையில் இரவு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.