அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமன முறைகேடு – ஏ.இ.ஓ தற்காலிக பணி நீக்கம்
கோவை: அரசு பள்ளிகளில் முறைகேடாக ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட உதவிக் கல்வி அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழு ஆசிரியர்கள் 2010க்கு முன் பணியில் சேர்ந்ததாக பதிவேடு தயாரித்து, பணி நியமனம் முறைகேடாக நடந்துள்ளது.
இதில் கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து வால்பாறை உதவி கல்வி அதிகாரி காளிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிமீறி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் ஏழு பேரிடமும் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவை மாவட்ட தொடக்க கல்வி பொறுப்பு அலுவலர் காந்திமதி கூறுகையில், "முதல்கட்ட விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் கட்ட விசாரணை முடிவுகள் கிடைத்தபின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications