திமுகவில் அழகிரியின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் தேர்தல் ரிசல்ட்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவினை நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மதுரையில் உள்ள மு.க.அழகிரி ஆதரவாளர்களோ, திமுகவிற்குள் மீண்டும் நுழைவதற்கான ஒரு வாய்ப்பாக தேர்தல் முடிவினை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு கிடைக்கும் வெற்றி தோல்விதான் அழகிரியின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறத்தொடங்கியுள்ளனர்.
போஸ்டர் யுத்தம்
அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30-இல் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என ஜனவரி 1ல் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர்.
எச்சரித்த கருணாநிதி
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி எச்சரிக்கை
கூண்டோடு கலைப்பு
தொடர்ந்து ஜனவரி 4ம் தேதி மதுரை மாநகர் மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளரான தளபதி தலைமையில் தாற்காலிக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டது.
அழகிரி ஆவேசப் பேட்டி
தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக உருப்படாது என தனியார் தொலைக்காட்சிக்கு அழகிரி பேட்டியளித்தார். தொடர்ந்து ஜனவர் 8ம் தேதி கோபாலபுரம் இல்லம் சென்ற அழகிரி கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பினார்.
ஆதரவாளர்கள் நீக்கம்
ஆனால் ஜனவரி 9ல் அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் திமுகவிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜனவரி 11ல் கருணாநிதியுடன் அழகிரி சந்தித்துப் பேசினார்.
வெளிநாடு பறந்த அழகிரி
தை பொங்கல் பண்டிகை முடிந்த உடன் கருணாநிதியுடன் அழகிரி மீண்டும் சந்தித்துப் பேசினார். மறுநாளே வெளிநாடு பயணமானார். அழகிரி வெளிநாட்டில் இருந்த சமயத்தில் அவரது ஆதரவாளர்களான மேலும் 5 பேர் திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
அழகிரி நீக்கம்
கோபத்தோடு வெளிநாட்டில் இருந்து திரும்பிய அழகிரி, ஜனவரி 24ம் தேதி காலை 7.30 மணிக்கு கருணாநிதியை சந்தித்தார். பகல் 12 மணிக்கு திமுகவிலிருந்து அழகிரி தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
திமுகவிற்கு எதிரான வேலை
இதனையடுத்து லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை தோற்கடிக்க மு.க. அழகிரி முழு வீச்சில் வேலை செய்யத் தொடங்கினார். காங்கிரஸ், பாஜக, மதிமுக என அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களும் மு.க. அழகிரியை சந்தித்து பேசினர்.
4வது இடத்திற்கு போகணும்
ஊர் ஊராகச் சென்று தனது ஆதரவாளர்களை சந்தித்த அழகிரி, லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியடையவேண்டும் என்றும், 4வது இடத்திற்கு தள்ளப்படவேண்டும் என்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்.
டிஸ்மிஸ் ஆன அழகிரி
இதனால் கடும் கோபமடைந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மார்ச் 24ம் தேதி மு.க அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கண்கள் பணிக்குமா?..
திமுகவில் இருந்து அழகிரி நீக்கம் செய்யப்படுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. ஏற்கனவே இவ்வாறு நடந்துள்ளது. மீண்டும் அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இம்முறை ஸ்டாலின் இறந்துவிடுவார் என்று அழகிரி சொன்னதாக கருணாநிதியே குற்றம் சாட்டியுள்ளார்.
தலைவிதி நிர்ணயம்
தென் மாவட்டங்களில் திமுக வெற்றி பெறுவது தன்னால்தான் என்று அழகிரி கூறி வருகிறார். அதை முறியடிக்க வேண்டும் என்றுதான் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒருவேளை திமுக 10க்கும் மொத்தமாக குறைவான இடங்களில் வெற்றி பெற்றால் 'அழகிரியால்தான் இந்த தோல்வி' என்று சொல்லி அவரை மீண்டும் உள்ளே சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்கின்றனர்.
ஒருவேளை 15 இடங்களில் வென்றால்
ஒருவேளை லோக்சபா தேர்தலில் 15 இடங்களைத் தாண்டி தி.மு.க வென்றுவிட்டால், இனி அழகிரிகள் தி.மு.கவுக்கு அவசியம் இல்லை என்று கருணாநிதியை அடக்கி விடுவார் ஸ்டாலின். எது எப்படியோ, லோக்சபா தேர்தல் முடிவுக்காக அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் அவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.