என்.டி.டிவியை அடுத்து மேலும் இரு டிவி சேனல்கள் ஒளிபரப்ப மத்திய அரசு தடை
சென்னை: என்.டி.டி.வி.யை அடுத்து மேலும் இரு தனியார் டி.வி. சேனல்களின் ஒளிபரப்பை ஒருநாள் முதல் ஒருவாரம்வரை தடைசெய்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தின்மீது கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான முக்கியமான விபரங்களை பகிரங்கப்படுத்தியதாக என்.டி.டி.வி. இந்தியா சேனல் மீது மத்திய அரசு முன்னர் குற்றம்சாட்டியது.
பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் செயல்படும்போது அதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதிப்பதில்லை என்ற கேபிள் டி.வி. நெட்வொர்க் விதிகளை என்.டி.டி.வி. மீறியதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது. இந்த விதிமுறைகள் அரசு மற்றும் ராணுவ நடவடிக்கையை ஒளிபரப்புவதில் வரம்புகளை வலியுறுத்துகிறது.
வெடி பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடம், விமானத்தளம், மிக் விமானங்கள், போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், எரிபொருள் தாங்கிகள் இவை சார்ந்த காட்சிகள் ஒளிபரப்பின் மூலம் வெளிப்படுத்தப்படும்போது அதை பயங்கரவாதிகள் நமக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த நேரிடும். இதை ரகசியம் காப்பது தேசிய பாதுகாப்பு மட்டுமல்ல, நாட்டின் சர்வதேச நிலைப்பாடும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது என்று மத்திய அமைச்சகம் கூறுகிறது.
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வரும் 9ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி நள்ளிரவு வரை 24 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் 'நியூஸ் டைம் அசாம்' என்ற தனியார் சேனலுக்கு வரும் 9ம் தேதி ஒருநாள் தடை விதித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆணையில், 'நியூஸ் டைம் அசாம்' சேனல், நவம்பர் 9 ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீட்டு வேலை செய்து வந்த மைனர் பெண் ஒருவரின் அடையாளத்தை ஒளிபரப்பியது.
இவ்வகையில் குழந்தையின் உருவத்தை ஒளிபரப்புவது, அக்குழந்தைக்கு பாதகம் விளைவித்து அதன் மரியாதையையும், அந்தரங்கத்தையும் குலைப்பதாக இருக்கிறதென்று அக்டோபர் 2013ஆம் ஆண்டு, சேனலுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சேனல் தன் தரப்பு விளக்கத்தை அளித்த பிறகு, 'அமைச்சகத்தின் கமிட்டி மீண்டும் பிரச்னை குறித்து ஆலோசித்து, ஒருநாள் தடை விதிக்கப்பட வேண்டும் என உணர்ந்திருக்கிறது. மற்ற சேனல்கள் இது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு, அவை அனைத்துக்கும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருக்கின்றன' என அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆணையில் தடை விதிக்கப்பட்ட மேலும் இரண்டு காரணங்களாக இறந்த உடல்களின் காட்சிகளையும், பெண்களை அவமதிக்கும் நிகழ்ச்சியையும் ஒளிபரப்பியது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேபோல், ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 'கேர் வோர்ல்ட் டி.வி.சேனல்' என்ற சேனலையும் வரும் 9ம் தேதி நள்ளிரவு 12-01 மணியில் இருந்து 7 நாட்களுக்கு தடைசெய்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.